Wednesday, August 8, 2018

ஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்




ம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலம்...

திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதை அறிவிக்க மணி அடித்தும், பேசுவதை நிறுத்துமாறு வேண்டியும் ரகுமான்கானின் பேச்சை நிறுத்த முடியாத சபாநாயகர் முதலமைச்சர் எம்ஜிஆரை நோக்குகிறார். முதலமைச்சரே எழுந்து பேச்சை நிறுத்துமாறு கேட்ட பிறகும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் ரகுமான்கான் !

" உங்களை அந்த ஆண்டவனால் கூட நிறுத்தமுடியாது ! " என எம்ஜிஆர் நொந்துக்கொள்ள, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி எழுந்து ரகுமான்கானை அமரச்சொல்கிறார். தன் கட்சி தலைவருக்கு தலைவணங்கி பேச்சை முடித்துக்கொள்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர்.

அடுத்ததாக கருணாநிதி பேசுகிறார்...

" தம்பி ரகுமான்கானை ஆண்டவனாலும் நிறுத்த முடியாது என்றார் முதலமைச்சர்... நான் நிறுத்திவிட்டேன்... காரணம் நான் ஆண்டவன் ! தமிழ்நாட்டை  இரண்டுமுறை ஆண்டவன் ! "

மாதமோ சித்திரை !
மணியோ பத்தரை !
மக்களுக்கோ நித்திரை !
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை ! "

என எளிய தமிழில் எதுகைமோனையில் விளையாடி சங்கத்தமிழை பாமரன் கொஞ்சும் தமிழாய் மாற்றிய அண்ணாவின் இதயத்தை கடன் கேட்ட கலைஞர் கருணாநிதி மீளாநித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.

தான் நினைத்த நேரத்தில், தான் நினைத்த திசையில் அரசியலை சுழற்றிவிடும் அச்சாணியாக அறுபதாண்டுகளுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஒரே அரசியல்வாதி இந்தியாவிலேயே கருணாநிதி ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அப்படிப்பட்ட தீவிரமான அரசியல் பணிகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, நாடக மற்றும் சினிமா பணிகள் என தன் அனைத்து பண்முகத்திறமைகளிலும் தனி முத்திரை பதித்த மனிதர் உலகிலேயே கருணாநிதி மட்டும்தான் என்றால்கூட அது மிகையாகாது !  கலைஞர் தொலைக்காட்சிக்கு வெற்றிகரமான ஆலோசனைகள் வழங்கியது முதல் எண்பதை தாண்டிய வயதில் முகநூலிலும் முத்திரை பதிக்க முயன்றதுவரை கருணாநிதியின் அரசியலை தாண்டிய ஆளுமை பற்றி பல பக்கங்கள் எழுதலாம் !

அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி தமிழக அரசியலின் அரைநூற்றாண்டுக்கான வரலாற்று ஆவணம் !

ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருந்த காலமாகட்டும் அல்லது  ஒற்றை உறுப்பினருடன் மங்கியிருந்த காலமாகட்டும் கருணாநிதியே அரசியலின் மையம் ! தன்னை நோக்கி தகிக்கும் பிரச்சனையை ஒரு ஒற்றை கேள்வியினால் தன் எதிரி பக்கமே திருப்பிவிடும் பிரம்மாஸ்த்திர சாதுர்யம் கொண்டவர் அவர் !

பூமியின் இரவு பகலை போல தமிழ்நாட்டின் அரசியல் உலகுக்கும் இரண்டே நிலைகள்தான். ஒன்று கருணாநிதி ஆதரவு மற்றொன்று  கருணாநிதி எதிர்ப்பு ! கருணாநிதியை சாதுர்யமாக எதிர்கொண்டாலே போதும் அரசியல் கிணற்றை தாண்டிவிடலாம் என்ற நிலை இருந்ததாலோ என்னவோ, தான் பெற்ற செல்வாக்குக்கு ஈடான விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்த அரசியல்வாதியும் அவர்தான் !  அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் சிலர் என்றால் அவருக்கு பயந்து அரசியல் ஆசையை ஒதுக்கிவைத்தவர்கள் பலர் ! அவர் பேச்சை நிறுத்தி, வீட்டில் முடங்கிய பிறகுதான் பல பிரபலங்கள் அரசியல் பேச வெளியே வந்தனர் !

அவரது முதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் குடும்ப ஆதிக்கம் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தின் வளர்ச்சிக்கான கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். அந்த சாதனைகளில் பலவற்றை சட்டபூர்வமாக்கி வெற்றி கணடவர். பூம்புகார், வள்ளுவர்கோட்டம், மாபெரும் நூலகம் என கலை பண்பாட்டு தளத்திலும் பல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற சொல்லாடல்களை வழக்கு மொழியாக்கியவரும் கலைஞர் தான். 

ருணாநிதியின் மறக்கப்பட்ட சாதனைகளில் மிசா காலகட்டமும் ஒன்று...

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடணப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து மாநில ஆட்சிகளை காவு கொண்டபோது அதனை கண்டித்து,  நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும் என செயற்குழுவை கூட்டி தீர்மானம் இயற்றிய இந்தியாவின் முதல் கட்சி திமுக. நெருக்கடி நிலையை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்கக்கூடாது என இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதையும் மீறி கருணாநிதி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான விலையாய் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அந்தக்கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள்வரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிட்டி பாபு,முரசொலி மாறன், மு க ஸ்டாலின் என பல திமுகவினர் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். சிறையில் நடந்த தாக்குதல்களின் காரணத்தால் சிட்டி பாபு உடல்நலம் குன்றி உயிர்நீத்தார்.

அதே மிசா காலகட்டத்தில் கடுமையான தணிக்கை விதிகளினாலும், மிரட்டல்கள் மற்றும் கைதுகளின் மூலமாகவும் பத்திரிக்கை சுதந்திரம் நாடு முழுவதும் பறிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பத்திரிக்கைகளே அரசுக்கு எதிராக எழுத தயங்கிய போது திமுகவின் முரசொலி இந்திரா காந்தியின் படத்தை ஹிட்லராக சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது.

அவசர நிலைக்கு பிறகான இந்திய அரசியலில் தான் தீவிரமாக எதிர்த்த இந்திராவுடன் " நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக " என கருணாநிதி கூட்டணி வைத்துக்கொண்டதை விமர்சிப்பவர்கள்கூட மாநில சுயாட்சி மற்றும் பிராந்திய நலனுக்கான அவரது அயராத உழைப்பை மறுக்கமாட்டார்கள்.

மொழிவாரி மாநிலங்களின் தோற்றம் முதல் மாநில சுயாட்சி கோரிக்கைவரை இந்தியாவின் மாநிலநலன் சார்ந்த அனைத்து இயக்கங்களிலும் முன்வரிசையில் நின்றவர் கருணாநிதி. சுதந்திர தினத்தின் போது மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.

" ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று  கருணாநிதியே கேட்டுக்கொண்டதுதான் அவருடன் வாழ்ந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் அவர் விட்டு செல்லும் செய்தி ! தொடர் தோல்வி தருணங்களை கூட  தனக்கு சாதகமான களங்களாக்கி அயராது உழைத்த அவரது போராட்ட குணத்தை ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வெண்டும்.

" யங்கா விட்டாலும் பரவாயில்லை அவர் இருந்ததே ஒரு தைரியம் " என முதுமையின் உச்சத்தில் இருந்த குடும்பத்தவர் பற்றிய உணர்வே கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிலும் தோன்றுகிறது...

இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் பற்றிய விமர்சனங்களும் வரலாறும் கருணாநிதி இருந்த போது,  கருணாநிதி இறந்த பிறகு என்ற இரு நிலைகளிலேயே பதியப்படும் !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


Saturday, May 19, 2018

பேரன்பின் பெருஞ்சுடர்


பாலகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை படித்ததிலிருந்து அவரது நாவல்களுக்கு அடிமையாகிப்போன சித்திக் அண்ணன் அதற்கு முன்னர்த் தினசரிகள் வாசிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் ! பிரான்ஸில் நட்பான ஆனந்துக்குப் பாலகுமாரனின் எழுத்துகள் மட்டுமே வேதம் ! உலக இலக்கியம் பேசினால்கூட அதுவும் பாலகுமாரனின் எழுத்தில் உண்டு என உதாரணம் காட்டக்கூடியவர் !

பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியத்தில் சேரும் சேராது என அவரது மெர்க்குரிப்பூக்கள் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே சேரக்கூடிய அதிதீவிர ரசிகர்களுக்கு ஈடாக, சித்திக், ஆனந்த் போன்ற வாசகர்களைக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரனாக மட்டும்தானிருக்க முடியும் ! தினசரிகள், வார மாத இதழ்களுடன் ஜோதிட சமையல்கலை புத்தகங்கள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் க்ரைம் எழுத்தாளர்கள் தவிர்த்து ஏகபோக இடம் பிடித்த முதல் எழுத்தாளர் பாலகுமாரன் தான் ! அவரது வாசகர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பரவியிருந்தனர்.

சமூகத்தின் சகலவிதமான மனிதர்களின் குணநலன்களையும் விருப்பு வெறுப்பின்றிக் குறுக்குவெட்டு பார்வையாய் நோக்கிய பாலகுமாரனின் எழுத்து, மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, அச்சிக்கல்களைத் தாண்டி அனைத்து மனங்களிலும் நிரம்பி வழியும் அன்பை வெளிக்காட்டியது. சக மனிதனை தான் படித்ததைப் போலவே தன் வாசகனையும் படிக்க, நேசிக்கப் பழக்கினார் பாலகுமாரன். தன் கதை மாந்தர்களின் வழியே சமூகத்தின் இருட்டுப் பக்கங்களைக் கூட எந்தவிதமான ஒழுக்கப் போதனைகளுமின்றி வாசகனுக்குக் காட்சிபடுத்த அவரால் முடிந்தது. லாரியிலிருந்து இறக்கும் முதல் அரிசிமூட்டையைக் கிடங்கு பெருக்கும் பெண்களுக்காகக் கிழித்துவிடும் கூலித்தொழிலாளியின் இரக்கத்தை வாசகனுக்கு உணர்த்த முடிந்த பாலகுமாரனால் மெர்க்குரிப்பூக்கள் நாவலின் தொழிற்சாலை முதலாளியின் மனதில் ஒளிந்திருந்த ஈரத்தையும் வெளிக்காட்ட முடிந்தது !

காதலை கர்வமாய், காமத்தை பாவமாய்ப் பாவிக்கும் சமூகத்துக்கு " காதல் என்பது விட்டுக்கொடுத்தல், காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுத்தல் " என இடையறாது உணர்த்த முயன்றன அவரது படைப்புகள். அதீத காமம் வேறு காரியங்களில் ஈடுபடாதபடி மனதின் சமன்பாட்டைக் குலைத்துவிடும் எனக் காமத்தை உளவியல்ரீதியில் விளக்கியது அவரது எழுத்து.

பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.

உடம்பிலிருந்து வெளியேறிய எழுத்துச்சித்தரின் ஆன்மா அவரது படைப்புகளின் வழியே பேரன்பின் பெருஞ்சுடராய் என்றென்றும் ஒளிர்ந்திருக்கும்.



பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Thursday, February 1, 2018

ஒரு சாண் வயிறே இல்லாட்டா...


ரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா ?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுரெ வாங்குமா பரோட்டா ?

... கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் சிங்காரி படத்துக்காக எழுதிய இந்தப் பாடல் வரிகளை "திருக்குறளைவிட மேலான தெருக்குறள் " எனக் கலைவாணர் என் எஸ் கே சிலாகித்துப் பாராட்டியதாகத் தனது நினைவு நாடாக்கள் நூலில் குறிப்பிட்டிருப்பார் கவிஞர் வாலி.


உலகெங்கும் அதிகார வர்க்கத்தின் அநீதிகள் மற்றும் சமூக அவலங்களுக்கு எதிரான "தெருக்குறள் " பெரும்பாலும் அச்சமூகம் சார்ந்த கலைஞர்களிடமிருந்துதான் பிறக்கும். இதற்கான அடிப்படை காரணம் படைப்பாளிகள் இயல்பாகவே சுதந்திர வேட்கை கொண்டவர்கள். அவர்களது படைப்புகளைப் பாதிக்கும் " கட்டாயங்களை " வெறுப்பவர்கள் !

"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
அதைக் காசுக்கு ரெண்டாய் விக்கச்சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் !"

வெள்ளையர்கள் தந்திரமாய் நாட்டைப் பிடித்து, சட்டை கசங்காமல் ஆட்சி செய்து வரி வசூலித்த வரலாறு முழுவதையும் நான்கே வரிகளில் சொல்லிவிடும் இந்தப் பாமர பாடல் ! மக்களோடு வளர்ந்து வாழ்ந்து, மக்களுக்காகவே கலை படைக்கும் கலைஞர்களுக்கே இதுபோன்ற வரிகள் கைக்கூடும் !

சிங்காரி படப் பாடல் வரிகளில் பல வரலாற்றுச் செய்திகள் அடங்கியிருக்கின்றன. சிங்காரி படம் வெளிவந்த சமயம் நாற்பதுகளில் இந்தியாவை வாட்டிய பஞ்சத்துக்குப் பிறகான காலகட்டம்.. அமெரிக்கர்கள் தங்களிடம் மிதமிஞ்சியிருந்த கோதுமையை இந்தியாவுக்கு இலவசமாக அனுப்பிய நேரம்.அதுவரையிலும் கோதுமையை அன்றாட உணவாக அறியாத தமிழர்களுக்குக் கோதுமை சார்ந்த உணவுபண்டங்கள் காலத்தின் கட்டாயத்தால் அறிமுகமாகின...

அப்படி அறிமுகமான பரோட்டாவை சாப்பிட நேர்ந்த முதல்தலைமுறை தழிழனின் ஆதங்கம் தான் இந்தப் பாடல். அன்று தமிழர்களைப் பாடாய்படுத்திய பரோட்டா இன்று சாதா,கொத்து, சில்லி, மட்டன், சிக்கன், முட்டை, வீச்சு எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டு தமிழரின் தவிர்க்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது !

ரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் அச்சமூகம் வாழும் நிலத்தின் விளைபொருட்கள், அந்நிலம் சார்ந்த தட்பவெப்பம், சமூகப் படிநிலை, பொருளாதாரச் சூழல் மற்றும் அந்தச் சமூகத்தின் பயண அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அந்நிய உணவுகளின் ருசியால் ஈர்க்கப்பட்டுப் பழகுவது, போர் மற்றும் பஞ்ச கட்டாயங்களால் அரசினால் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும் உணவு, சந்தை தேவையை முன்னிட்டு பெருவணிக நிறுவனங்களின் தந்திரமான விளம்பரங்களால் பழக்கப்படுத்தப்படும் உணவு எனவும் உணவு பழக்கங்களைப் பிரிக்கலாம்.

இந்திய பிரியாணியின் வரலாறு முகலாயர்களிடமிருந்து தொடங்கியது என்றால், இன்று தமிழ்நாடு என்றாலே ஞாபகத்துக்குவரும் சாம்பார் சரபோஜி மன்னர்களின் பரிசு !

இன்று உலகமயமாக்கத்தினால் பரவும் நுகர்வு கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சி, வணிக விளம்பரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுகொண்டிருக்கிறது. அரிசி கிடைக்காத பஞ்சத்தினால் கோதுமைக்குப் பழகிய காலம் போய்,பெருமைக்காகப் பீட்சா, பர்கருடன் பெப்ஸி கோக் அருந்தும் காலத்தில் வாழ்கிறோம் !

னது பூர்வீகமான காரைக்காலை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்த்தினர் சிலர் பெருநாள் போன்ற பண்டிகை தினங்களில் " வட்டலப்பம் " என்றொரு இனிப்பு பதார்த்ததைச் சமைப்பார்கள். "வட்டில் அப்பம் " என்பது மருகி வட்டலப்பம் ஆனது ! வட்டில் என்ற தாம்பாளம் போன்ற, ஆழமான பாத்திரத்தில் வைத்து நீராவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் இந்தப் பதார்த்தத்தின் பூர்வீகம் மலேசியா ! காரைக்கால் இஸ்லாமியர்களில் பலர் நெடுங்காலமாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பணி செய்யச் சென்றவர்கள். அவர்களின் மூலம் காரைக்காலை வந்தடைந்து பண்டிகை பலகாரமாக மாறியதே வட்டலப்பம் !

இரு வேறுபட்ட கலாச்சாரச் சந்திப்பினால் அறிமுகமாகும் உணவு வகைகள் ஒரு புறமென்றால், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அந்நியர்களின் உணவு பழக்கங்களைப் பெருமைக்காகப் பின்பற்றுவது வேறொரு வகை !

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த சமயத்தில் காரைக்காலின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய தன் தந்தை பிரெஞ்சு மேயரை சந்தித்துவிட்டு வந்து அவரைப்போலவே தக்காளி சாஸ் மற்றும் வினிகருடன் முள்கரண்டியால் சாப்பிட முயன்றதை பாட்டி கதை கதையாய் சொல்லுவாள் !

பண்டைய காலத்தில் அந்நிய ஆட்சியாளர்கள் மற்றும் பயணங்களால் மாற்றமடைந்த உணவு பழக்கம் ஆங்கில ஆட்சி தொடங்கி இன்றுவரை பெருவணிக நோக்கங்களால் திட்டமிட்டு மாற்றப்படுகிறது ! இன்று இந்திய காலை மற்றும் மாலை வேளைகளின் அத்யாவசிய தேவையாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவியுள்ள தேனீர் ஆங்கிலக் காலனிய அரசின் வணிகப் பரப்புரைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பானம் !

கொழும்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்த " சேக்காளி " அனுப்பிய தேயிலை தூளை அவன் குறிப்பிட்ட பதத்தில் பாலில் கொதிக்கவைத்து இரவில் குடித்துவிட்டுப் படுத்த குடியானவ குடும்பம் தூக்கமில்லாமல் புரண்டு அதிகாலை விழிப்பை தவறவிட்டு மற்றவர்களால் கேலிக்கு உட்படுவதை விவரிக்கும் கி.ராஜநாராயணனின் கோபல்ல புரத்து மக்கள் கதையை நினைக்கும் போதெல்லாம் நிஜ வாழ்வில் எனக்கு நேர்ந்த இரண்டு சம்பவங்கள் மனதில் நிழலாடும் !

த்து வயது என ஞாபகம்...

எங்கள் ஊரின் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்த என் தந்தையின் நண்பர் பணி நிமித்தமாய் மும்பை சென்று திரும்பிய போது பளபளப்பான இரண்டு பாக்கெட்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஐந்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம், பிரியாணியைப் போன்ற சுவையோடு இருக்கும் என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற பேசி அவர் கொடுத்தவை மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ! நூடுல்ஸ் தமிழ்நாட்டு விளம்பரங்களில் கூடத் தலைகாட்டாத நேரம் அது !...

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல் என் தந்தையின் மேற்பார்வையில் குடும்பமே அடுக்களையில் கூடி, அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டிருந்த அளவு நீரை வானலியில் கொதிக்கவைத்து நூடுல்ஸை கொட்டி அதனுடனிருந்த மசாலாவையும் போட்டு கிளறி இறக்கினோம் ! கோபல்லபுரத்து மக்களைப் போலவே நாங்களும் இரவில் புதிய உணவை முயற்சித்த உளவியல் காரணம் எனக்கு இன்றுவரை பிடிபடவில்லை !

" அய்யே ! இது என்ன பெரிய ஆஸ்பத்திரி மருந்து நாத்தம் ?... "

" உப்பும் இல்லை... உரைப்பும் இல்லை... "

ஆளாளுக்கு வாயில் போட்டதை விழுங்க முடியாமல் புலம்ப,

" இத போயி பிரியாணி மாதிரின்னு சொன்னானே பாவி... எத்தனையோ தடவை நம்ம வீட்டு பிரியாணியைச் சாப்பிட்டும் அவனுக்கு ருசி தெரியல பாரு ! "

எனப் பன்ச் வைத்தாள் பாட்டி !

திண்ணை இல்லாத வீடும், டீவி சீரியல்களும் இல்லாத அந்தக் காலத்தில் கூப்பிட்ட குரலுக்குத் தெருவே ஓடி வரும் ! ஒரு வீட்டின் நிகழ்வு மிக விரைவாய் பல தெருக்களுக்குப் பயணித்துவிடும் ! வெளியே சொன்னால் வெட்ககேடு என்பதால் யாரிடும் சொல்ல வேண்டாம், நண்பரிடம் மட்டும் மரியாதைக்காக நன்றாக இருந்தது எனக் கூறிவிடலாம் என்றெல்லாம் குடும்பச் சத்திய பிரமாணம் எடுத்த பிறகு, வானலியை நூடுல்ஸுடன் புழக்கடையில் கழுவ போட்டுவிட்டு உறங்கிவிட்டோம்.

பழமையான நான்கு கட்டுவீட்டின் புழக்கடை கொல்லைப்புறம் பார்த்துத் திறந்திருக்கும். இரவில் எச்சில் பாத்திரங்களில் மிச்சமிருப்பவற்றைப் பூனைகள் தின்றுவிடும்...

மறுநாள் காலையில் மற்ற பாத்திரங்களில் இருந்த மிச்சங்களெல்லாம் காணாமல் போயிருக்க, மாகி நூடுல்ஸ் மட்டும் அப்படியே இருந்தது ஆச்சரியம் ! அந்தக் காலப் பூனைகளுக்குகூட அது பிடிக்கவில்லை போலும் !

அதே போலப் பெப்ஸி...

மீசை அரும்பத் தொடங்கிய விடலை பருவத்தில் எங்கள் ஊருக்குள் நுழைந்தது பெப்ஸி பானம் ! நாங்கள் கால்பந்து விளையாடும் கவர்னர் மஹால் மைதானத்தின் ஓரத்தில் பாஸ் அண்ணனின் நன்னாரி சர்பத் கடை... பக்கத்து ஊர்க்காரர்களையும் ஈர்த்து சதா வரிசையில் நிற்கவைக்கும் அளவுக்குப் பிரபலமானது பாஸ் கடை நன்னாரி ! அதுவரையிலும் நன்னாரியுடன் உள்ளூர் ஸ்பெசலான டைமண்ட் சோடா கலர், ஸ்பெசல் லெமன் பாட்டில்களை விற்றவர் அவற்றுடன் பெப்ஸி பாட்டில்களையும் வாங்கி அடுக்கினார் !

பெப்ஸியுடன் சாலிடர் கலர் டிவியும் கோலோச்ச தொடங்கிய நேரம் ! டிவி விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களெல்லாம் பெப்ஸியை உயர்த்திபிடித்து ஒரே மூச்சில் குடித்துச் சிரிக்க,பெப்ஸியை ருசிக்க வேண்டும் என்ற ஆசையை அதன் விலை தடுத்தது !

ஒரு மாலைவேலையில், அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்த பைசல் தன் சட்டைபையிலிருந்து பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் காட்டிவிட்டுப் பாஸ் கடை நோக்கி ஓடினான்... சில நொடிகளில் திரும்பியவன் ஐந்து நிமிட ஆட்டத்துக்குப் பிறகு என்னையும் அழைத்துக்கொண்டு கடைக்கு ஓட, மூடி திறக்கப்பட்டு ஸ்டிரா பொதிந்த, ஜில்லிப்பினால் நீர் முத்துகள் படர்ந்த, நுரை பொங்கும் இரண்டு பெப்ஸி பாட்டில்கள் !

அவசரமாய் ஆளுக்கு ஒன்றாய் எடுத்து ஆர்வமுடன் ஒரு வாய் உறிஞ்சினோம்...

" ச்சீ ! இப்படி இருக்கு... எல்லா விளம்பரத்திலேயும் இதை எப்படிடா சிரிச்சிக்கிட்டுக் குடிக்கறான் ? "

பெப்ஸியினால் புரை ஏறிய என்னால் அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை !

" அண்ணே... மீதி காசுக்கு ரெண்டு நன்னாரி போடுங்கண்ணே... வாயை கழுவனும் ! "

பைசல் தலை உலுக்கி பேசினான் !

ரம்பத்தில் நம்மை அப்படிப் படுத்திய நூடுல்ஸ் , பெப்ஸி மற்றும் இன்னபிற அந்நிய உணவுகள் மற்றும் பானங்கள் எல்லாம், " இதையெல்லாம் சாப்பிட்டால்தான் இந்தச் சமூகத்தில் வாழ தகுதியானவர்கள் " என்பதான தந்திர விளம்பரங்களால் நம் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன !

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழிந்து நூடுல்ஸ் முதல் மென்பானங்கள் வரை பலவும் அவற்றில் ஒளிந்திருக்கும் உடலுக்குக் கேடான வேதியல் கலவைகளுக்காகப் பலதரப்ப்பு மக்களால் புறக்கணிக்கப்பட்டு,ஆங்கிலேய காலத்து அந்நிய துணி மறுப்பு போராட்டத்துக்கு ஈடான ஒரு புரட்சி இன்று தோன்றியிருப்பது மகிழ்ச்சியான நிகழ்வுதான் என்றாலும் மறுபுறம் பிளாஸ்டிக் அரிசி, செயற்கை முட்டை எனப் பயங்கரச் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன !

பிளாஸ்டிக் அரிசியும், செயற்கை முட்டைகளும் வறுமை கோட்டுக்கு மிகக் கீழே இருக்கும் ஆப்ரிக்க மக்களின் சந்தைக்காம் ! ஆக, இல்லாதவன் எதைச் சாப்பிட்டாலும் எந்த அரசாங்கத்துக்கும் கவலை கிடையாது !

மக்கள்தொகை பெருக்கம் மற்றும் விளைநிலங்களின் அழிவினால் இன்னும் நாற்பது ஆண்டுகளில் உலக மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கான தானியங்கள் கிடைக்காது என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை. மாற்று உணவாய் அவர்கள் பரிந்துரைப்பது பூச்சிகளையும் புழுக்களையும் ! இன்னும் சில காலத்தில் செயற்கை அரிசியும் முட்டையும் இயற்கையைவிடச் சிறந்தது எனப் பரிந்துரைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ! பெருவணிக நிறுவனங்களும் அரசாங்கமும் கைகோர்த்தால் எதுவும் நடக்கும் !

சுயநல அரசியலும் சமுதாய ஏற்ற தாழ்வுகளும் இருக்கும் வரை " ஒரு சாண் வயிறே இல்லாட்டா " போன்ற தெருக்குறள்கள் சாகாவரம் பெற்று சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.