Sunday, December 31, 2017

ஒரு நொடி சிந்திப்போம்...

லைநட்புகளுக்கு,

மிகுந்த மனவேதனையுடனும், அவநம்பிக்கையுடனும் நான் எழுதிய பதிவு இது. முழுவதும் படித்து, குறைந்தபட்சம் ஒருவருக்காவது இதனைப் பகிர முடியும் என்றால் படியுங்கள்... மேலோட்டமாகப் படித்துவிட்டு, சாமானியனுக்காக நன்று, அருமை எனப் பின்னூட்டமிட்டு மறப்பதாயிருந்தால் படிக்கவே வேண்டாம். ஏனெனில் இது நம் மண்ணின் வருங்காலம் பற்றிய கவலை. மததுவேச அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சம். நம் பிள்ளைகளுக்கு அன்பை கற்பிக்கப் போகிறோமா அல்லது வெறுப்பைக் கற்பிக்கப் போகிறோமா என்பதற்கான பதில்.

நன்றி



" றைவனே ! இதுவரை என்னைக் காப்பாற்று என வேண்டினேன்... இனி நீ உன்னைக் காப்பாற்றிக்கொள் ! ... இந்த மனிதர்களிடமிருந்து ! "

                                                                             - அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்




தத்தை மக்களின் ஓப்பியம் என வர்னித்த கார்ல் மார்க்ஸ், அது பூர்ஷ்வாக்களின் புத்தியில் உதித்தது என்றான் ! கார்ல் மார்க்ஸ் காலத்து பூர்ஷ்வாக்களையும் மிஞ்சும் அதிகார வெறிபிடித்த இன்றைய அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய அந்த ஓப்பியம் படுத்தும்பாடு பயமுறுத்துகிறது !

ஜெரூசலத்தைப் பகடையாக்கி, இரண்டாயிர வருடத்துத் தீயில் குளிர்காய்ந்து உலகை கூறுபோட அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது... தாயேஷ் போன்ற அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையையும் ஆட்டிப்பார்க்கின்றன... மாட்டுக்கறி அரசியலோ இரண்டாயிரம் வருடங்களையும் தாண்டிய பண்முகக் கலாச்சார ஒற்றுமைக்கு உலைவைக்கப் பார்க்கிறது !

பசியின் பொருட்டுகூடத் தன் இனத்தைக் கொல்லுவதில்லை மிருகங்கள். மதவெறி பிடித்த மனிதனோ பிரார்த்தனைக்குக் கூடியவர்களைக்கூடக் கொல்லுகிறான். ஒட்டி உலர்ந்த அடிமாட்டுக்காக அடுத்தவீட்டுக்கரனை அடித்தே கொல்லுகிறான்... பசிக்கு சோறிட சொன்ன, அன்பை போதித்த, சகோதரத்துவத்தைப் போதித்த மதங்களின் பெயரால் மனிதத்தை அழிக்கிறான்... நிச்சயமில்லாத சொர்க்கத்துக்காகத் தான் வாழும் மண்ணை நரகமாக்குகிறான் !

இதற்கு அந்த மதம் இந்த மதம் என யாரும் விதிவிலக்கல்ல !

அனைத்து மதங்களிலும் மத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள், கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு மேடையில் பேசியதை போல இறைவன் உண்டு எனக் கூறிவிட்டு அவர்களின் செயல்களால் அவனை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் ! அவரே குறிப்பிட்டதைப் போல, மதம் படித்தவர்களைவிட மதம் பிடித்தவர்கள் அதிகமாகி போனதால் மனிதநேயத்துக்கு உண்டான அபாயம் இது !

இவனைக் கேட்டால் அவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான்... அவனைக் கேட்டால் இவன் செய்வதால் செய்கிறேன் என்கிறான் ! யாராவது ஒருத்தன் நிறுத்தினால் போதும்... அனைத்தையும் ஒரு நொடியில் சரிசெய்துவிடலாம். ஆனால் அந்த ஒரு நொடி, சராசரி மனிதனுக்குக் கிட்டிவிடாமல் ஆளும் வர்க்கத்தால் ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்டே வருகிறது !

மேற்கு நாடுகளில் கிறிஸ்த்துவமே பிரதானம். வளைகுடா நாடுகளில் இஸ்லாம் ஒன்றே மதம். ஆசிய நாடுகளின் பல நாடுகள் பெளத்த சமயத்தைப் பின்பற்றும் நாடுகள். இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காய் உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, அந்தந்த மதத்தவருக்கெனத் தனித்தனி கலாச்சாரப் பினைப்புகளையும்கொண்ட உலகின் ஒரே தேசம் இந்தியா மட்டும்தான்.

இந்து மதத்தின் தாய் மடியாய் திகழும் இந்தியாவின் முஸ்லிம்கள் மற்ற நாடுகளின் முஸ்லிம்களிலிருந்து மிகவும் வேறுபட்ட, தனிக் கலாச்சார அடையாளம் கொண்டவர்கள். அதே போல இந்திய கிறிஸ்த்துவப் பாரம்பரியமும் தனித்துவமானது. கேரள திருச்சபையின் புகழ் வாட்டிகன்வரை பரவிய ஒன்று. தேசத்தின் பெருமைகளாய் பேசப்படவேண்டிய இவையனைத்தும் மக்களிடையே பகைமை வளர்க்க பகடைகளாய்ப் பயன்படுத்தபடுகின்றன !

மதவாத பரப்புரைகள் இருள்மேகங்களாய் இந்தியவான் முழுவதும் சூழ்ந்துவருகின்றன.

பெரியாரின் பூமியில் மதப்பருப்பு வேகாது எனக் கூவி கூவியே விஷ விதைகளைத் தமிழகத்திலும் தூவி வருகிறர்கள் ! தீவிர வலதுசாரிகளை எதிர்க்கும் பாணியில் தந்திரமாய் அவர்களை வளர்க்கும் பணியில் சில ஊடகங்களும் அடக்கம் !

தூண்டிவிடுபவர்களும் துண்டிக்கத் தூண்டுபவர்களும் எங்குமே பாதிக்கப்படுவதில்லை. உலகின் ஏனைய பிரச்சனைகளைப் போல மததுவேச அரசியலால் பதிக்கப்படுபவர்களும் தேசத்தின் அன்றாடங்காய்ச்சிகள்தான் ! அமெரிக்க அதிபரும், இஸ்ரேல் மற்றும் சிரியாவின் அரசியல்வாதிகளும் ஆபத்து வட்டத்துக்குள் இல்லை ! இந்திய பிரிவினையில் லட்சம் லட்சமாய் அழிந்தது அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத இந்துக்களும் இஸ்லாமியர்களும்தான் !

இதையெல்லாம் ஒரு நொடிகூட யோசிக்கவிடாதபடி மதம் என்னும் ஓப்பியம் சாமானியர்களின் சிறுமூலையில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது !

இவற்றையெல்லாம் மீறி, நோன்பு தொழுகைக்குக் கோவில் இடத்தைக் கொடுத்த இந்துக்கள், இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த இஸ்லாமிய பெண்கள் என ஆங்காங்கே நிகழும் ஒரு நொடி நிகழ்வுகளும் அடுத்தடுத்த பரப்புரைகளில் கானல் நீராய்  காணாமல் போய்விடுகின்றன.

இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !

அளவுக்கு மீறிய அதிகாரவர்க்கத்தின் அராஜகமும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளும், மதபோதகர்களின் விஷ பிரசங்கங்களும் அவர்களுக்கே எதிரான ஒரு நொடியை பிரசவிக்கும் ! அந்த ஒரு நொடியில் சாமானியர்களின் புத்தியில் வெடிக்கும் கிளர்ச்சிதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றது ! பிரெஞ்சு புரட்சியைத் தோற்றுவித்ததும் பொதுவுடமையைத் தூக்கிபிடித்ததும் அதுதான். காந்திக்கும் முன்னதாகச் சுதந்திர வேட்கையைத் தூண்டிவிட்ட சிப்பாய் கலகமும் சாமானிய மக்களின் புத்தியில் வெடித்த ஒரு நொடி கிளர்ச்சிதான் !

மத நம்பிக்கை என்பதும் காதலை போல, காமத்தை போல அந்தரங்கமானது. மதம் என்னும் வெற்றுடம்பை உங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் எப்படியும் ஆராதித்துக்கொள்ளுங்கள்... ஆனால் வெளியே வரும்போது மத நல்லிணக்க சட்டையை மறக்காமல் மாட்டிக்கொள்ளுங்கள். என் மதம் தான் பெரியது என்பவராக இருந்தால்... தயவுசெய்து மதச் சகிப்ப்புத்தன்மை சட்டையையாவது போட்டுக்கொள்ளுங்கள் !

ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.