Saturday, July 18, 2015

காலம் திருடிய கடுதாசிகள் !

வீட்டின் கூடத்தில், மேசையின் மீதோ, சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ தூசி படிந்த, வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட பெரிய மோர்பி ரேடியோ... சமையல் புகையினால் பழுப்பேறிய அந்த ரேடியோவுக்கு அருகில் ஒருசில பழைய இன்லாண்டு லெட்டர் மற்றும் காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள்... அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் !...

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நடுத்தர மற்றும் நடுத்தரக் குடும்ப வீடுகளில் காணக்கிடைத்த அந்தக் காட்சியைத் தங்கள் மனப்பெட்டகத்தில் ஓவியமாய் ஒளித்துகொண்டவர்கள் அதனைச் சிரமம் பார்க்காமல் தேடி எடுங்கள் ...

இந்தப் பதிவு சொல்லப்போவது " விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு... " என வயலின் ஆக்ரோசத்துடன் தொடங்கி, ஒரு தலைமுறையின் சுகதுக்கங்களின் துணையாய் தவழ்ந்த, அந்த மோர்பி ரேடியோவின் வழியே கசிந்த, திரையிசை தூறலை அல்ல... அதற்கருகே அடுக்கப்பட்டிருக்கும், அந்தச் சுக துக்கங்களைப் பதிவு செய்த " கடுதாசிகளின் " கதையை !


தெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில் அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும் !

" பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம் ! " எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், " தாயும் சேயும் நலம் " என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், " அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே ! " என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா ?!

" காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா ?... " என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது !

ன்றைக்கும் கடிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனது பால்ய வயதின் நிகழச்சி ஒன்று மனதில் நிழலாடும்...

எங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடை. தன் வீட்டு திண்ணையைக் கடையாக மாற்றியிருந்த அந்தக் கடையின் உரிமையாளரை தெருப்பிள்ளைகள் அனைவரும் மாமா என அழைத்ததால் அந்தக் கடைக்கு மாமா கடை என்றே பெயர் ! பெரியவர்களுக்கு அவர் கடை மாமா !

பாட்டிக்காக " லெட்டர் " வாங்க மாமா கடை சென்றேன்...

கடையில் நல்ல கூட்டம்.

" ஒரு இங்கிலாந்து லெட்டர் கொடுங்க ! "

எட்டணா என ஞாபகம்... நான் காசை நீட்டி கேட்க, என்னை ஏற இறங்க பார்த்தவர், வேறு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் !

" கொஞ்சம் இரு தம்பி !.... "

நான் மீன்டும் மீன்டும் கேட்க, அவரோ என்னைக் காக்கவைத்துவிட்டு மற்ற வியாபரங்களைப் பார்க்க, எனக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டியது !

" தம்பி என்னா கேட்டீங்க ?.... "

ஒரு வழியாய் அனைத்து வியாபரங்களையும் முடித்துவிட்டு அவர் கேட்க,

" ஒரு இங்கிலாந்து லெட்டர் !... "

நான் கோபமாய்க் கூற,

" இங்கிலாந்து லட்டரா ?... அதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்... அது இங்கிலாந்து லட்டர் இல்லம்மா... இன்லாண்டு லெட்டர்... இன்லாண்டுன்னா உள்நாடுன்னு அர்த்தம்... படிக்காத நாங்க வேணா தப்பா சொல்லலாம்... படிக்கற தம்பி நீங்க சரியா புரிஞ்சிக்கனுமில்ல ?.... "

அவரின் வாஞ்சையான வார்த்தைகள் இன்றும் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கின்றன !


புதிதாய் திருமணமான எதிர்வீட்டு அக்காவின் கணவருக்குத் துபாயில் வேலை...

" என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனம் குளிர... "

" டேய்... அது என்னா படம்ன்னு தேடி கேசட் கொண்டு வரியா ?... "

வானம் குளிர்ந்து மாலை மயங்கிய ஒரு பொழுதில், தெருக்கோடி டீக்கடையிலிருந்து காற்றில் கலந்து காதுகளில் கசிந்த சினிமா பாடலை கண்களில் நீர் கட்ட லயித்துக் கேட்ட அக்கா கெஞ்சியது !

வாடகை வி சீ ஆர் கேசட் பிளேயர் பிரபலமான காலம்...

ராஜா ரெக்கார்டிங் சகாயம் அண்ணனிடம் படத்தை விசாரித்து, அப்போது ஊரிலிருந்த அனைத்து வீடியோ கேசட் கடைகளிலும் அலைந்து, அந்தப் படத்தைக் கொண்டு வந்தேன் !...

ராணிதேனி !

பார்க்க முடியாத பாடாவதி பிரிண்டை பரவசமாய்ப் பார்த்து, அந்தப் பாடலை மட்டும் பலமுறை ரீவைண்ட் பண்ண சொல்லி கேட்டது அக்கா !

" டேய்... அவருக்கு ஒரு லெட்டர் எழுதனும்... எனக்குச் சரியா எழுத வராதுடா... நான் சொல்றேன்... நீ எழுதறியா ? "

தயங்கி தயங்கி கேட்ட அக்காவுக்குக் கடிதம் எழுதி கொடுத்தேன்.

" டேய்... இதை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா ! "

காதலில் உருகி எழுதிய கடிதம் சொந்த கணவனுக்குத்தான் என்றாலும் சஙடமாய்க் கேட்டது அக்கா !

ஒவ்வொரு நாளும் காத்திருந்து, எதிர்பார்ப்பு பொய்த்த ஒரு பகலில் கணவனிடமிருந்து பதில் கடிதம் !

" டேய்... டேய்... படிச்சி சொல்லுடா... "

அன்பு மனைவி என ஆரம்பித்த கடிதத்தை, பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,... நீ ஏதேதோ எழுதியிருக்கிறாய் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இல்லை நேரமும் இல்லை என முடித்திருந்தார் !

படித்துவிட்டு அக்காவை பார்த்தேன்... சலனமற்ற முகத்துடன் கடிதத்ததை வாங்கி நான்காய் மடித்துக்கொண்டு விடுவிடுவெனப் போய்விட்டது அக்கா !

இப்படி எத்தனையோ அக்காக்களின் புரிந்துக்கொள்ளப்படாத பிரியங்களைச் சுமந்து திரிந்தன அன்றைய கடுதாசிகள் !


பால்காரர் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை... பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !

காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்... ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! ...

பதினொரு மணி வாக்கில் பழையைச் சைக்கிளின் முன்னும் பின்னும் பெரிய பைகளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, பிரசன்னமாவார் தபால்காரர் !

" தபால்காரரே.... நமக்கு..... "

" இன்னைக்காச்சும் மணியார்டர் உண்டா... "

" பாவிபய கடுதாசி போட்டிருக்கானா தம்பி ?.... "

ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்... ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !

" இருக்கு !... இருக்கு... ! "

" தேதி பொறந்து ரெண்டு நாளுதானே ஆகுது தாத்தா... பென்சனெல்லாம் நாளைக்குத்தான் டிஸ்பேட்ச் பண்ணுவாங்க ! "

" ஏன் ஆத்தா கோபப்படறே... கடுதாசிதானே ... ? போட்டிருப்பான் !... நாளைக்கு வரும் ! "

தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்... ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !

" இருங்க தபால்காரரே... அடியேய்... காபி கொண்டா... "

" இல்லீங்க இருக்கட்டும் !.... "

" அட ஒரு வாய் மோர் இல்லேன்னா தண்ணியாச்சும் குடிச்சிட்டு போங்க ! "

மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, மோரோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !

அப்போதெல்லாம் பார்சல்கள் மிக அரிதாக வருபவை ! தெருவில் யார் வீட்டுக்காவது பார்சல் வந்துவிட்டால், வந்தது என்ன என்பதை அறிந்துகொள்ளத் தெரு முழுவதும் விசாரணையில் இறங்கும்... அதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்தால் தெருவே தூக்கமின்றிப் புரளும் !

சிங்கப்பூரிலிருந்து வந்தது ஒரு சாக்லெட் பட்டையானாலும், பங்கு வைக்கப்பட்டுத் தெருவின் அனைத்து வீடுகளுக்கும் வரும் !

" கொஞ்சம் படிச்சி சொல்லுப்பா.... "

" இரு ஆத்தா... லைனை முடிச்சிட்டு மதியமா வந்து எழுதி தரேன்... "

கண் பார்வை மங்கிய பாட்டியின் கடிதத்தைப் படித்துகாட்டிவிட்டு, பதில் எழுத மதிய உணவுக்குப் பின்னர் வருவார் !

" தபால்காரரே... அடுத்த ஞாயித்துக்கிழமை நம்ம பெரிய பொண்ணுக்கு வலைக்காப்பு... வீட்டுக்கு வந்து.... "

" அதெல்லாம் வேண்டாம்மா... அதான் சொல்லீட்டீங்களே... "

அதுநாள் வரையிலும் காக்கி யூனிபார்மில் மட்டுமே பார்த்த தபால்காரர் வேட்டியும் சட்டையுமாகக் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொள்ளுவார்.

கொடுப்பார்கள், அழைப்பார்கள் என அவர் நினைத்து பழகாத, காரியம் ஆகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் இல்லாதிருந்த காலம். அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் ! சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் !

" வீட்டு ஆம்பளைங்க யாரும் இல்லையா ?... "

தந்தியுடன் வருபவர் சன்னமான குரலில் கேட்டால் வீட்டுப் பெண்கள் பதற தொடங்கிவிடுவார்கள்...

" ஒண்ணுமில்லேம்மா... உடம்பு முடியலன்னுதான் இருக்கு.... "

காத்திருந்து குடும்பத்தில் மூத்தவர்களிடம் துக்கச் செய்தியை பக்குவமாய்ச் சொல்லிவிட்டு போவார்.

" .... ருக்காரா ? "

கோடையின் வெப்பம் தகித்த ஒரு மதியத்தில் என் பெயரை சொல்லி கூப்பிட்டார் தபால்காரர்...

என் பெயருக்கு வந்த முதல் கடிதம் !

" உனக்காடா ?... உனக்கு யாருடா கடிதம் போட்டது ?... "

பள்ளி ஹாஸ்டலில் தங்கி என்னுடன் படித்த அமீன் எழுதிய கடிதம் !

மூன்றாம் வகுப்புக் கோடை விடுமுறையில் இருந்த என்னை வீட்டினர் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்தக் கடிதத்தைப் படித்தபோது உண்டான பரவசம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது !

தீபாவளி, பொங்கல் விழாக்களின் போது பலருக்கு வாழ்த்து அட்டைகள் வரும்...

நானும் ஒரு பொங்கல் அட்டை வாங்கி என்னுடன் படித்த அய்யாக்கண்ணு அனுப்புவது போல, கையெழுத்தை மாற்றி எழுதி எனது முகவரிக்கே அனுப்பி, நண்பனிடமிருந்து வந்ததாக வீட்டில் பெருமைபட்டுக்கொண்டதை இன்று நினைத்தால் சிரிப்பு வருவதுடன் அன்று அப்படிச் செய்யத்தூண்டிய உளவியல் காரணத்தையும் அறிந்துக்கொள்ள ஆவல் எழுகிறது !

புதுவை மாநிலத்தின் பல குடும்பங்களைப் போல என் குடும்பமும் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட குடும்பம் என்பதால் பிரான்சிலிருந்து தாத்தா, சித்தப்பாக்களின் தபால்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும்...

பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களை வந்தடைய ஏறக்குறைய பதினைந்து நாட்கள் ஆகும். அந்தப் பதினைந்து நாள் கணக்கு என் சித்திமார்களுக்கு அத்துப்படி ! தபால்காரர் வரும்வரை காத்திருக்க முடியாமல் என்னைத் தபால்நிலையத்துக்கே விரட்டுவார்கள் !

காலை பத்துமணிவாக்கில் ஊரின் அனைத்து " போஸ்ட் மேன்களும் " அவரவர் " லைனுக்கான " தபால் கட்டுகளுடன் தபால் நிலையத்தைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு கட்டை பிரித்து அடுக்குவார்கள்.

" மாரியம்மன் கோவில் வீதி பத்தாம் நம்பர் இருக்கா சார்... "

" சார்.... பள்ளிவாசல் தெரு ரெண்டு... "

" சர்ச் ஸ்ட்ரீட் ரெண்டாம் நம்பர் வீடு ! "

சினிமா கொட்டகை டிக்கெட் கெளண்டர் போல அவரைச் சுற்றி மொய்த்து பரபரக்கும் கூட்டத்தில் புகுந்து லெட்டர் பெற்று திரும்புவது பெரும் சாதனை !

தெருக்கோடியில் வசித்த நந்தகுமார் அண்ணன் முதல் ஆளாய் தபால் ஆபீசில் நின்றால், எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த பத்மா அக்கா கடிதம் எழுதியிருக்கிறது என அர்த்தம் ! குணிந்த தலை நிமிராமல் கல்லூரி சென்று வரும் அக்கா எந்தக் கடையில் லெட்டர் வாங்கி எங்கிருந்து போஸ்ட் செய்யும் என்பதும், அந்தக் கடிதம் கிடைக்கும் நாள் அண்ணனுக்கு எப்படித் தெரியும் என்பதும் எங்கள் தெருவின் சிதம்பர ரகசியம் !

தெருவில் நுழையும் தபால்காரரை எதிர்கொண்டு அண்ணனின் கடிதத்தை வாங்கித் தாவணியில் மறைத்துகொண்டு கொல்லைப்புறம் ஓடும் பத்மா அக்கா !

பத்மா அக்கா திருமணமாகி போகும் வரையிலும், அதுவரையிலும் டீ. ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டு ரசித்த நந்தகுமார் அண்ணன் ராஜேந்தரை போலவே தாடியும் வளர்த்துக்கொண்டு " நான் ஒரு ராசி இல்லா ராஜா " பாடலை தலை சிலுப்பிக் கேட்க ஆரம்பித்த வரையிலும் அவர்களின் காதலை சுமந்து பறந்த கடித பட்டாம்ப்பூச்சிகள் அவர்கள் வீட்டினர் எவரின் கைகளிலும் சிக்காமல் சுழன்றது ஆச்சரியமான அதிசயம் !


தொன்னூரின் ஆரம்பத்தில் எங்கள் தெரு தபால்காரர் ஓய்வில் செல்ல, முதல் முறையாக ஒரு பெண் தபால்காரராக வந்தார். வெயில் மழை என எந்தக் காலமாக இருந்தாலும் சைக்கிளை ஓட்டாமல் எநேரமும் தள்ளிக்கொண்டே வரும் அந்தப் பெண்ணுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தெரியாது எனத் தெருவே பிரிந்து பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை !

நானும் பிரான்ஸ் வந்து தாத்தா, சித்தப்பாக்களைப்போலப் பொறுப்பாய் கடிதம் எழுத தொடங்கினேன்...

தொழில்மயமாக்கலின் முக்கிய நிகழ்வாய் சர்வதேச தொலைபேசி வசதி வீடுகளுக்கு வர ஆரம்பித்தது.... பேஜரில் தொடங்கி அடுத்து ஆரம்பித்த அலைபேசி தொழில்நுட்பம் அதிவிரைவாய் உலகெங்கும் பரவத் தொடங்கியது....

சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது !

காலம் எப்போதுமே இப்படித்தான் !...

விரைவான பேருந்து பிரயாணத்தின் போது காற்றின் ஓசையை மீறி வேகமாய் நம் காதுகளுக்குள் தவழ்ந்து சட்டென வெளியேறி மறைந்துவிடும் சாலையோர டீக்கடை மோர்பி ரேடியோவின் கானத்தைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தும் எதையும் நாம் எதிர்பாராத தருணம் ஒன்றில் சட்டெனத் திருடி தன்னுள் எங்கோ மறைத்துவிடும் !


ரு சில வருடங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்த போது தபால்கார பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது...

ஆளுக்கு ஒன்று என்பதையும் தாண்டி விரலுக்கு ஒன்று என்ற அளவுக்குக் கைப்பேசிகள் அதிகரித்துக் குறுஞ்செய்திகள் குப்பைகளாய் மலிந்த காலத்தில் வீடுகளின் திண்ணைகள் கார் பார்க்கிங்காய் மாறி, திண்ணை தாத்தாக்கள் எல்லோரும் முதியோர் இல்லங்களுக்கு மாறிவிட்டார்கள் !...

" ஏங்க... ? இந்த நேரத்துல போன் பண்ணாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ?... "

ஏதோ ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரின் அழுகை சத்தத்தைத் தாண்டி , தெருவில் தெரித்த அலைபேசும் பெண்ணின் குரல்... வெளிநாட்டு கணவனாக இருக்கலாம் !

" இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு.... ! "

பக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளை தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொண்டு அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்க தோன்றியது...

என்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பி பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலை கண்டதும் பேச தோன்றவில்லை !

சாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மன சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.